தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அஸ்வதி தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

நேற்று லக்னோவில் போராட்டத்தின்போது இறந்த ஒருவருடன் சேர்த்து, அந்த மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
”நாங்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை. ஒரு துப்பாக்கி தோட்டாவைக் கூட பயன்படுத்தவில்லை,” என்று அந்த மாநில காவல் துறையின் தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று ஒரு போராட்டக்காரர் இறந்தது பற்றி “எங்கள் தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. எப்படி மரணம் நடந்தது என்று எனக்குத் தெரியாது. போராட்டத்தாலோ, போலீஸ் நடவடிக்கையாலோ அது நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று போராட்டம் தீவிரமடைந்தது.
மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டதுடன், இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.
உத்தரப் பிரதேசத்தின் புலந்சர் நகரில் வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவமும் நடந்துள்ளது.