இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதிகார பகிர்வு என்பது ஒரு அரசியல் மயப்பட்ட விடயம் மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொள்வதன் ஊடாகவே, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முடியும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு கௌரவமாக வாழ முடியாது என தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதாக குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் மக்களுக்கு ஏன் கௌரவமாக வாழ முடியாது என்ற கேள்வியையும் இதன்போது எழுப்பினார்.
பெரும்பான்மை சிங்கள மக்களினால் நிராகரிக்கப்படும் அதிகார பகிர்வு, சமஷ்டி (கூட்டாட்சி) போன்ற விடயங்களை, அவர்களின் அனுமதியின்றி எவ்வாறு வழங்குவது என கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நாட்டில் ஆட்சியிலிருந்த அனைத்து அரசியல்வாதிகளும் அதிகார பகிர்வு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்களே தவிர, மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதிகார பகிர்வு என்ற விடயமானது முற்றிலும் பொய்யான ஒன்று என கூறியுள்ள அவர், பெரும்பான்மை சிங்கள மக்கள் இருக்கின்ற நாட்டை பிரித்து அதிகார பகிர்வை வழங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.