உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னெடுத்தவர்களின் இலக்காக கொழும்பிலுள்ள இந்திய தூதரகமும் காணப்பட்டது என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இலங்கையின் நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியர்கள் பெருமளவு தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றும் தாக்குதல் இலக்காக காணப்பட்டது என புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்கள் இந்திய தூதரகம் ஒரு இலக்காக காணப்பட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளன என நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அரச புலனாய்வு சேவையின் இயக்குநர் அக்காலப்பகுதியில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய பூஜித் ஜெயசுந்தரவிற்கு ஏப்பிரல் 9 மற்றும் 12 திகதிகளில் மிகவும் இரகசிய கடிதமொன்றை அனுப்பியிருந்தார்,அந்த கடிதத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரகத்தை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடுகின்றனர் என தெரிவித்திருந்தார் என தெரிவுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.