ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது பிரதேச தேர்தல் தொகுதியிலும், தெற்கு மாகாணத்திலும் பாரிய தோல்வியினை அடைவார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஹொரணையில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு சொந்தமான தேசிய வளங்களை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தவும், விற்பனை செய்வதற்குமான அதிகாரம் 5 வருட காலம் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு கிடையாது. எமது ஆட்சியில் தேசிய உற்பத்திகள், தேசிய வளங்கள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்படும்.
மக்களுக்கு சேவையாற்றியுள்ளவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ளோம். கடந்த நான்கரை வருட காலமாக நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். அனைத்து விடயங்களையும் முன்னிலைப்படுத்தி சிறந்த அரசியல் ரீதியான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.