– முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
வடக்கு சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தினரை அழிப்பதற்கு அமெரிக்காவால் கட்டியமைக்கப்பட்ட குர்திஷ் போராளிகள் மீது துருக்கி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள போகின்றது என்பது தெரிந்தவுடன் அவர்களை கைவிட்டுவிட்டு அமெரிக்கப் படைகள் வடக்கு சிரியாவைவிட்டு வெளியேறுகின்றனர். அமெரிக்கப்படைகள் முழுமையாக வெளியேற முன்பே துருக்கி படையினர்கள் குர்திஷ் போராளிகளின் நிலைகள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளார்கள்.
SDF (Syrian Democratic Forces) என்றழைக்கப்படும் குர்திஷ் இஸ்லாமிய போராளிகள் இயக்கம் வடக்கு சிரியாவில் தனியான ராஜ்யம் அமைப்பதற்கு முயன்று வருகின்றது.
வடக்கு சிரியாவில் அவ்வாறு அமைந்தால், துருக்கியில் தனிநாடு அமைப்பதற்கு நீண்டகாலமாக போராடிவருகின்ற குர்திஸ்தான் போராளிகளுக்கு அது சாதகமாக அமைந்துவிடும் என்பதனால் சிரியாவிலும், ஈராக்கிலும் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி செயல்பட்டு வருகின்றது.
வடக்கு சிரியாவில் நிலைகொண்டிருந்த ஐ.எஸ் இயக்கத்தை அழிப்பதற்காக இந்த குர்திஷ் போராளிகளை அமெரிக்கா நன்றாக பயன்படுத்தியது.
அதற்காக ஆயுதங்களும், பணமும் குர்திஷ் போராளுகளுக்கு அமெரிக்கா வழங்கியதுடன், அவர்களது முகாம்களில் அமெரிக்க படைகள் நிலைகொண்டு பாதுகாப்பும் வழங்கினார்கள்.
இதுவே வடக்கு சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தினர்களை தோற்கடிப்பதற்கு உதவியாக இருந்தது. அத்துடன் குர்திஸ்தான் ராஜ்யத்தினை அமைப்பதற்கு தாங்கள் உதவி புரிவதாக வாக்குறுதி வழங்கியதுடன், ஐ.எஸ் இயக்கத்தினர்களை முற்றாக துடைத்தெறிய போராட வேண்டுமென்றும் அமெரிக்கா குர்திஷ் போராளிகளுக்கு ஏற்கனவே ஆசை காட்டியிருந்தது.
ஆனால் தங்களை முழுமையாக கைவிட்டுவிட்டு அமெரிக்கா திடீரென வெளியேறும் என்று குர்திஷ் போராளிகள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
உலகில் உள்ள இஸ்லாமியர்கள் ஒற்றுமைப்பட்டால் அது எதிர்காலத்தில் மீண்டும் இஸ்லாமிய ஹிலாபத்து உருவாகிவிடும் என்பதனால் அதனை தடுக்கும்பொருட்டு பிரதேச ரீதியாகவும், மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும், மார்க்க முரண்பாடுகள் மூலமாகவும் உலகில் உள்ள இஸ்லாமியர்களை பிரித்தாளுகிறது அமெரிக்கா.
பலமான நிலையில் உள்ள இஸ்லாமிய நாடுகளை அல்லது இயக்கங்களை அழிப்பதற்கு இன்னுமொரு இஸ்லாமிய இயக்கத்துக்கு ஆயுத பொருளாதார உதவிகளை செய்கிறது.
தன்னால் கட்டியமைக்கப்பட்ட இயக்கம் பின்னாட்களில் வளர்ச்சி அடைந்தால், மீண்டும் இன்னுமொரு சக்தியை கொண்டு அவர்களை அழித்தொழிக்கின்றது. இது அமெரிக்காவின் நீண்டகால திட்டமிடலாகும்.
அதாவது எமது கைகளால் எங்களது கண்களை குத்துகிறது அமெரிக்கா. இந்த உண்மையை நாங்கள் புரிந்துகொள்ளாமல் சிறிய சிறிய முரண்பாடுகளை வைத்துக்கொண்டு எங்களுக்குள் யார் காபீர்கள் என்று நாங்கள் பட்டிமன்றம் நடத்துகின்றோம்.
அந்தவகையில் பலமான நிலையில் தன்னால் கட்டியமைக்கப்பட்ட குர்திஷ் இயக்கத்தினை அழிப்பதற்கு துருக்கி இராணுவத்துக்கு வழிவிட்டு விலகிச் செல்கிறது அமெரிக்கா.
இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. அதாவது ஐ.எஸ் இயக்கம் அமெரிக்காவினதும், யூதர்களினதும் செல்லப்பிள்ளை என்றால், ஐ.எஸ் இயக்கத்தினர்களை அழிப்பதற்காக குர்திஷ் இயக்கத்தினருக்கு ஏன் அமெரிக்கா பெருமளவில் உதவிகளை செய்தது ? என்பதுதான் அந்த கேள்வியாகும்.