கொழும்பு: தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி பயங்கரவாதம் இல்லாத சூழலை ஏற்படுத்தி பொருளாதா ரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை முன்னெடுத்தேன். முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கும், தமிழ்- முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி தற்போது தோற்றம் பெற்றுள்ளது. இதற்கு ஜனநாயக ரீதியில் தீர்வு காண்பது அவசியம்.
தேசிய நல்லிணக்கம் பலப்படுத்தப்பட்டு அவை அனைத்து விடயங்களிலும் செயற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு அமைந்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய முடியும்.
தேர்தல் விஞ்ஞாபனம், மற்றும் தேர்தல் வெற்றிக்கான கொள்கைகள் அனைத்தும் இன்னும் ஒரு வார காலத்தில் வெளியிடப்படும். இதுவரையில் தேர்தலை மையப்படுத்தி 50 ற்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து இனங்களும் சமவுரிமையுடன் வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.