லண்டன்: லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவர் பதவியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார். குமார் சங்கக்கார, மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறும் முதல் பிரித்தானியர் அல்லாத நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் சங்கக்காரவிற்கு மேரில்போன் கிரிக்கெட் கழகம் ஆயுட்கால உறுப்பினர் பதவியினை வழங்கியிருந்தது.
அத்தோடு, சங்கக்கார இந்த கழகத்தினுடைய உலக கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் அங்கத்துவராகவும் இருந்தும் உள்ளார்.
இன்று தனது பதவியை பொறுப்பேற்றுள்ள சங்கக்கார, எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் வரை அதன் தலைவராக கடமையாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த மே மாதம் லோட்ஸில் இடம்பெற்றது. இதன்போதே தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், எம்.சி.சி. கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அறிவித்தார்.
லண்டனின் லோர்ட்ஸ் பகுதியில் 1787 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மேரில்போன் கிரிக்கெட் கழகம் கிரிக்கெட் விளையாட்டினுடைய விதிமுறைகளை முதல் தடவையாக உருவாக்கியதோடு, இந்த கழகம் உருவாக்கிய கிரிக்கெட் விதிமுறைகளையே சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.