பௌத்தர்களை தவிர்த்த ஏனைய தரப்பினருக்கு இலங்கை அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதியாக முடியாது என சமூகத்தில் கருத்தொன்று நிலவுகிறது. பௌத்தர்கள் தவிர்த்த ஏனையோர் ஜனாதிபதியாக முடியாது என்ற கருத்து சமூகத்தில் அதிக அளவில் பேசப்படுகிற நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போது தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் போட்டியிட்ட வரலாறும் இருக்கிறது.
இலங்கையில் 1982ஆம் ஆண்டு, நாட்டின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட நாள் முதல் தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதற்கான தகவல்கள் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு ஆவணங்களில் உள்ளன.
1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் சின்னத்தில் தமிழரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் போட்டியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 1988 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் எந்தவொரு தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கவில்லை.
எனினும், 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முஸ்லிம் கட்சி சார்பில் அப்துல் ரசூல், தராசு சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு தமிழ் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் வேட்பாளரோ போட்டியிடவில்லை.
எனினும், 2010ல் நடைபெற்ற தேர்தலில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களும் ஒரு தமிழ் வேட்பாளரும் போட்டியிட்டனர்.
இதன்படி, மொஹமத் காசிம் மொஹமத் இஸ்மயில், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மொஹமத் முஸ்தபா ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
2015ஆம் ஆண்டு மொஹமட் இலியாஸ், இப்றயிம் மிப்லார் மற்றும் சுந்தரம் மகேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இலங்கையில் 7 தடவைகள் நடைபெற்றுள்ள ஜனாதிபதி தேர்தலில் 8 தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ள போதிலும், அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை பெற்றிருக்கவில்லை.
பௌத்தர்கள் தவிர்த்த ஏனையோர் ஜனாதிபதியாக முடியாது என்றால், தேர்தல்கள் திணைக்களம் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏன் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
பௌத்தர்கள் தவிர்த்த ஏனையோர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என சமூகத்தில் கூறப்பட்டுவரும் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. போட்டியிடுவோருக்கு மக்கள் வாக்களிக்கும் பட்சத்தில் நிச்சயம் ஜனாதிபதியாக சிறுபான்மையினர் வர முடியும்.
சிறுபான்மையின வேட்பாளருக்கு அந்த ஊர் மக்களே வாக்களிக்க பின்வாங்கும் நிலையில் இது சாத்தியமற்றதாகவே அமையும்.