ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரை தெற்கிலும் வடக்கிலும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை எங்களுக்குள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளும் கொள்கையின் அடிப்படையில் பணியாற்றுகின்றன எனவும் தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க அவ்வாறான அணுகுமுறையை கொண்டுள்ள கட்சிகள் இணைந்து பணியாற்ற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சில விடயங்கள் தொடர்பில் எங்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் உள்ளபோதிலும் எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ள ஜேவிபி தலைவர் ஜேவிபியிடம் இரகசிய நிகழ்ச்சிநிரல் இல்லை தமிழ்தேசிய கூட்டமைப்பிடமும் அவ்வாறான இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.