– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :
நோயாளிக்காக ஓத வேண்டிய துஆக்கள் : ஒரு முஸ்லிம் நோயுற்றால், அவரை நோய் விசாரிப்பது மற்ற முஸ்லிமின் கடமையாகும். இயல்பிலேயே நோயுற்றவரின் மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டுவிடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய நோயாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும். வீட்டில் உள்ளவர்களின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக நோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இருந்தால், அதுவும் நம் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருந்தால். கவலை மிகவும் அதிகரித்துவிடும். இந்த நேரத்தில் யாராவது அவரிடம் சென்று ஆறுதல் வார்த்தைகளையும், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யும் போது, நோயாளியின் உள்ளத்தில் உள்ள பெரும் சுமை நீங்கியது போல் இருக்கும். இதை அனுபவ ரீதியாக நாம் நமது வாழ்வில் பார்க்கின்றோம். இது போன்ற உயர் நோக்கங்களைக் கருதியே நோயாளியை உடல் நலம் விசாரிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கின்றது.
நோயாளியை சந்திக்கச் சென்றவர், அவரின் சுக நிலைபற்றி விசாரித்து, அவரின் நோய் நீங்க அல்லாஹ்விடத்தில் துஆச் செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது, பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர, அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள், நோய் விசாரிக்கச் சென்றால் நோயாளிக்காக துஆக்களும் செய்வார்கள், நாமும் நோயாளிகளை சந்திக்கும் போது, அந்த துஆக்களைநோயாளியின் ஓதி ஊதி, நோய் விசாரிக்கும் விஷயத்திலும் நபி(ஸல்) அவர்களை முழுமையாக பின்பற்றுவோமாக! அதனால் நோயாளியின் நோய் குணமாகும், இன்ஷா அல்லாஹ்.
நோயாளியை நலம் விசாரிப்பது கடமை என்பது பற்றியும், அதற்காக கிடைக்கும் நன்மைகள் பற்றியும் வந்திருக்கும் ஒரு சில ஹதீதுகள் பின்வருமாறு:
1) நோயாளியை உடல் நலம் விசாரித்தல், 2) ஜனாஸாவை (நல்லடக்கம் செய்ய) பின் தொடர்ந்து செல்லுதல், 3) தும்மியவருக்கு (யர்ஹமுகல்லாஹ் எனக்கூறி) துஆச் செய்தல், 4) சத்தியம் செய்தவரின் சத்தியத்தை (அது நன்மையானதாக இருந்தால் அதனை) நிறைவேற்றி வைத்தல். 5) அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்தல், 6) அழைப்புக் கொடுத்தவருக்கு (விருந்துக்கு) பதிலளித்தல், 7) ஸலாமை (மக்களிடையே) பரத்துதல் ஆகிய (ஏழு) விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவினார்கள். புகாரி, முஸ்லிம் : பராஉ பின் ஆஜிப் (ரலி)
நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமிடம் ஐந்து உரிமைகள் உள்ளன. 1) ஸலாமுக்கு பதிலளித்தல் 2) நோயாளியை உடல் நலம் விசாரித்தல் 3) ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல், 4) அழைப்புக்கு (விருந்துக்கு) பதில் அளித்தல், 5) தும்மியவருக்கு (யர்ஹமுகல்லாஹ் எனக்கூறி) துஆச் செய்தல். புகாரி, முஸ்லிம்: அபூஹுரைரா (ரலி)
நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை உடல் நலம் விசாரித்தால், அவரிடமிருந்து அவர் திரும்பும் வரை ‘குர்பத்துல் ஜன்னா’வில் ஆகிடுவார். அல்லாஹ்வின் தூதரே ‘குர்பத்துல் ஜன்னா’ என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அது சுவர்க்கத்தில் பறிக்கப்பட்ட கனிகள் ஆகும் எனக் கூறினார்கள். முஸ்லிம் : தவ்பான்(ரலி)
நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கு சுவனத்தில் பறித்த பழங்கள் கிடைக்கும். திர்மிதி : அலி (ரலி)
நோயாளிக்காக நபி(ஸல்) அவர்கள் செய்த துஆக்கள்
நபி(ஸல்) அவர்களிடம் யாராவதொருவர், தம் நோயைப் பற்றியோ, புண்ணைப் பற்றியோ, காயத்தைப் பற்றியோ முறையிட்டால், நபி(ஸல்) அவர்கள் தங்கள் நடுவிரலை பூமியில் வைத்து, பின்னர் உயர்த்தி
بِسْمِ اللهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيْقَةِ بَعْضِنَا، يُشْفَى بِهِ سَقِيْمُنَا، بِإِذْنِ رَبِّنَا.
பிஸ்மில்லாஹ், துர்பது அர்ளினா, பிரீகதி பஃளினா, யுஷ்ஃபா பிஹி ஸகீமுனா, பிஇத்னி ரப்பினா.
பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால் ….. (இது) எங்கள் பூமியின் மண், எங்களில் சிலரின் எச்சியுடன் கலந்துள்ளது. எங்கள் இரட்சகனின் கட்டளையால், இதனைக் கொண்டு எங்களின் நோயாளி குணமடைவார் என கூறுவார்கள். புகாரி. முஸ்லிம் : ஆயிஷா(ரலி)
நபி(ஸல்) அவர்கள், தங்கள் குடும்பத்தினரில் சிலரின் உடல் நலத்தை விசாரிப்பார்கள். அப்பொழுது தங்கள் வலது கரத்தை அந்நோயாளியின் மீது தடவி (பின்வரும் துஆவை ஓதுவார்கள்)
اَللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَأْسَ، اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا.
அல்லாஹும்ம ரப்பன்னாஸி, அத்ஹிபில் பஃஸ, இஷ்ஃபிஹி வஅன்தஷ்ஷாஃபீ, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக, ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமன்.
பொருள்: இறைவா! மனிதர்களின் இரட்சகனே! கஷ்டத்தை போக்கி வைப்பாயாக! அவருக்கு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் குணமளித்தலைத் தவிர வேறு குணமளித்தல் கிடையாது. எந்த நோயையும் விட்டு வைக்காத அளவு குணமளிப்பாயாக! என்று கூறுவார்கள்.புகாரி. முஸ்லிம் : ஆயிஷா(ரலி)
நபி(ஸல்) ஓதிப்பார்த்ததைக் கொண்டு உமக்கு ஓதிப்பார்க்கட்டுமா? என்று தாபிதுல் பன்னானி(ரஹ்) அவர்களிடத்தில் நான் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்” என்று கூறினார்கள். அதன்படி
اَللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ الْبَأْسِ، اِشْفِ أَنْتَ الشَّافِيْ، لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا.
அல்லாஹும்ம ரப்பன்னாஸி, முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபீ, லா ஷாஃபிய இல்ல அன்த, ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமன். புகாரி, முஸ்லிம் : அனஸ்(ரலி)
பொருள்: இறைவா! மனிதர்களின் இரட்சகனே! கஷ்டங்களை போக்குபவனே! நீயே குணமளிப்பவன், குணப்படுத்துவாயாக! உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு யாருமில்லை. எந்த நோயையும் விட்டு வைக்காத அளவு குணமளிப்பாயாக! எனக் கூறி ஓதிப்பார்த்தார்கள். புகாரி, முஸ்லிம் : அனஸ்(ரலி)
-Suvanam